நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Wednesday, December 28, 2011

Thursday, November 3, 2011

தீண்டாமை (இல்லாத) தேசம்….!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது மல்லையாபுரம் கிராமம். வழக்கமாக எல்லா சேரிகளையும் போலவே தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் பெயரையே தாங்கி நிற்கிறது மல்லையா (நாயக்கன்) புரம். மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் வரும் சாலை தாராபுரம் போகும் சாலையில் இணையும் இடமான செம்பட்டியிலிருந்து தோராயமாக 10 கி.மீ பராமரிப்பில்லாத குண்டும் குழியுமான சாலையில் பயணித்து, மல்லையாபுரத்தை நாம் அடைந்தோம்.

கடந்த 30.10.2011 அன்று தமிழகம் முழுதும் அனைத்து தேர்தல் அரசியல் கட்சி தலைவர்களாலும், தேவர் சாதியினராலும் கொண்டாடப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் (தேவர்) குருபூஜையை மல்லையாபுரம் கிராமத்தில் வாழும் தேவர் சாதியினர் தலித்துகள் மீதான வன்முறைத்தாக்குதலோடு கொண்டாடி முடித்திருக்கிறார்கள்.

மல்லையாபுரம் கிராமத்தில், சுமார் 150 சக்கிலியர் குடும்பங்களும், 40 தேவர் குடும்பங்களும், சுமார் 350 நாயக்கர் குடும்பங்களும் வசிக்கின்றனர். சக்கிலியர்கள் விவசாயக்கூலிகளாகவும், சென்னை முதலான வெளியூர்களுக்கு சென்று பறையடிப்பதையும் தொழிலாக செய்து வருகின்றனர். தேவர் சாதியினர் திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்து கொண்டும், பால் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். நாயக்கர்களிடம் தான் பெரும்பாலான நிலங்கள் உள்ளன, நாயக்கர்கள் விவசாய முதலாளிகளாக உள்ளனர்.

ஆண்டு தோறும் 30.10.2011 அன்று முத்துராமலிங்கன் பிறந்த நாளில் மல்லையாபுரத்தில் ஒரு தோட்டத்திலிருந்து முத்துராமலிங்கத்தின் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊரின் மையப்பகுதியில் வைத்து கும்மியடித்து பூஜைகள் செய்யப்பட்டு கொண்டாடப்படுவதும், ஊர்வலத்தின் போதும் பூஜைக்கொண்டாட்டங்களின் போதும் உள்ளூர் சக்கிலியர்கள் இலவசமாக பறை அடிப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஆண்டும் வந்து இலவசமாக பறை அடித்து தருவதாக தலித்துகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மாலை 4 மணிக்கு ஊர்வலம் கிளம்புகிற நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் தலித்துகள் பறை அடிக்க போகவில்லை. மைக்செட் மூலமாக தலித்துகளுக்கு பறையடிக்க தேவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலித்துகள் செல்போன் மூலமாக மழை பெய்து கொண்டிருப்பதால்தான் வரமுடியவில்லை என்றும் மழையில் அடித்தால் தப்பு கிழிந்து விடும் என்றும், எங்க பொழப்பே போய்விடும் என்றும், தகவல் சொல்லியனுப்பியுள்ளனர்.

ஓ! நாங்க சொல்ற நேரத்துக்கு நீங்க அடிக்க மாட்டீங்க? உங்களுக்கு வசதியான நேரத்துலதான் நாங்க சாமி கும்பிடணுமோ? என்று கேட்டு செல்போனை துண்டித்து விட்டனர். பறை முழக்கம் இல்லாமலேயே பூஜைக்கொண்டாட்டங்களை முடித்து விட்ட தேவர் சாதியினரில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் தலித்துகள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி தட்டி எழுப்பி, வீடுகளின் தாழ்வாரங்களில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த பறைகளை கிழித்து எறிந்து, இந்த தப்ப வெச்சுக்கிட்டுதானடா இந்த ஆட்டம் கட்டுறீங்க? என்று கேட்டுக்கொண்டே வீடுகளையும் தலித்துகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

செல்போன் மூலமாக தலித்துகள் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்ல, உடனடியாக செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனும், டி.எஸ்.பியும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். முதலில் மைக்செட்காரரையும் மைக்செட்காரர் அடையாளம் காட்டிய 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கம் போல ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிக்கு மட்டும் காவல் துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்திச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே தலித்துகளை விசாரித்த டி.எஸ்.பி, மறுநாள் பசும்பொன் குருபூஜைக்கு போய்விட்டு திரும்ப வருகிறவர்களுக்கு பந்தோபஸ்து அளிக்க வேண்டிய கடமை இருப்பதால், மறுநாள் மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் வரச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் மாலை 5 மணிக்கு தலித்துகள் காவல்நிலையம் சென்றுள்ளனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச்செயலர் முருகன், மாவட்டத்தலைவர் ராசாராம், மாவட்ட அமைப்பாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் காளிராஜ், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி பொறுப்பாளர் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் மைதீன்பாபு, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் அரசு, தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் கதிர் ஆகியோரும் காவல்நிலையத்தில் இருந்துள்ளனர்.

செம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் கணேசன் தலித்துகளை நோக்கி, எழுத்து மூலமான புகார் தந்தால்தான் புகார் பதிவு செய்வேன்! என்னப்பா எழுத்து மூலமான புகார் தர்றீங்ளா என மிரட்டும் தொனியில் கேட்க, தலித்துகள் நேற்றே வாக்குமூலம் தந்தோமே என்று சொல்லியுள்ளனர். இடையில் குறுக்கிட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச்செயலர் முருகன் காவல்நிலைய ஆய்வாளரிடம், என்னங்கய்யா இது அநியாயாமாக இருக்கு? பாதிக்கப்பட்ட தலித்துகள் பகுதிக்கு பாதுக்காப்பு போடாமல் தாக்குதல் நடத்தியவர்கள் பகுதிக்கு பாதுகாப்பு போட்டிருக்கிறீர்கள்! நேற்றே வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு அதை வைத்தே F.I.R போடாமல், எழுத்து மூலமான புகார் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கேட்க, நீ ஒண்ணும் எனக்கு சட்டம் சொல்லித்தரவேணாம்!, இந்த மக்கள் (தலித்துகள்) ஒரு நாளும் ஒண்ணு சேந்து போய் அவங்கள (தேவர்களை) அடிச்சுர மாட்டாங்க! அவங்க ஒண்ணு சேந்து அடிச்சுரக்கூடாதேன்னுதான், அங்க போலீச நிறுத்தினேன்! என்று சொல்ல, பதிலுக்கு முருகன், தலித்துகள் ஒருநாளும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு எப்படி நீங்களே முடிவு பண்ணலாம்? வாக்குமூலத்தை வைச்சே F.I.R போடலாம் ஆனா எழுத்துப்பூர்வமா புகார் வேணும்னு தலித்துகளை மிரட்டுறீங்க! உங்ககிட்ட நியாயம் கிடைக்கும்னு தெரியல! நாங்க எஸ்.பி ய பார்க்க போகிறோம் என்று சொல்லி விட்டு கிளம்ப, காவல்துறையினர் அங்கிருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரை தலித்துகளிடம் பேசச்சொல்லியுள்ளனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தலித்துகளிடம், எப்படியும் அவங்க நெலத்துக்குதான் வேலைக்குப் போயாகணும், அவங்கள பகைச்சுகிட்டு வாழ முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க! வேணுமுன்னா இனிமே, இப்படி அடிக்க மாட்டோம்னு அவங்க கிட்ட எழுதி வாங்கிக்கலாம்! என்று சொல்ல தலித்துகளும் அவ்வாறே எழுதிக்கொடுத்துவிட்டு வந்து விட்டனர். இதற்கிடையில், வீடுகள் நொறுக்கப்பட்ட காட்சிகளை எடுத்த சி.டியை தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இருக்க ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு சி.டியை தேவர்களிடமே கொடுத்தது தனிக்கதை.

பிடியாணை வேண்டாக்குற்றங்களுக்கு யாருடைய புகாரும் தேவையில்லை என்கிற சட்டவிதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு மனுதர்மத்தை மிகச்சிறப்பாகவே நடைமுறைப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர்.

நீலவேந்தன்.

Monday, October 3, 2011

ஆயினும் நாங்கள் அரசியல் கட்சிகளின் அடிமைகளே…!

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், யாராவது இருவர் சந்தித்துக்கொண்டால், பேச்சின் மையப்பொருள் உள்ளாட்சி மன்ற தேர்தலாகத்தான் இருக்கும். கிராமங்களில் இருக்கும் தேனீர்க்கடைகளில் அமர்ந்து கொண்டு, ஜெயலலிதா யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும். விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஏற்கனவே எல்லாம் நிறைந்து போயிருக்கிற ஆதிக்க சாதியினர் இவ்வாறு பேசுவதில் வியப்பொன்றுமில்லைதான். ஆனால், ஒரு நொடியைக் கூட மகிழ்ச்சியாக கடந்து விட முடியாத தலித்துகள் கூட இவ்வாறு தேர்தலைப்பற்றியே பேசி திளைப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்குத்தெரிய பல தலித் அரசு ஊழியர்கள், அன்னா ஹசாரே பற்றியும், பெட்ரோல் விலை உயர்வு பற்றியும் வாய் கிழிய மணிக்கணக்கில் பேசுகிறார்கள். உள்ளூரில் ஆதிக்க சாதியினருக்கான பிரச்னையிலும் இவ்வாறே மேலதிகமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். திருப்பூரில் நிலவும் சாயப்பட்டறை பிரச்னைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றனர். ஆனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டைப் பற்றிக் கேட்டால், உதட்டைப் பிதுக்குகிறார்கள். நாம் பேச ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இடத்தை விட்டு நழுவுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

தனிநபர்கள் கூட ஊழல் போன்ற பிரச்னைகளை இந்திய அளவிலான விவாதப்பொருளாக மாற்றுவதில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட தலித்துகளால், தங்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமை, வன்கொடுமை, இழிவு ஆகியவற்றை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. தலித் தலைவர்களுக்கோ அடுத்தடுத்து வரும் தேர்தல்களே முக்கிய வேலைத்திட்டமாக மாறிவிடுகிறது.

சமூக மாற்றத்திற்காக பணியாற்றும் தலித் இளைஞர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலான நாளாகவே தொடங்குகிறது.

கொங்கு மண்டலம் என்று ஆதிக்க சாதிவெறியர்களால், அழைக்கப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்திற்கு ஒரு பெருமை இருப்பதாக வாய் கிழிய பேசிக்கொள்வார்கள். வார்த்திகளில் கூட மரியாதை இருப்பதாகவும், பண்பாடான மக்கள் வாழுகிற மண்டலம் என்று பெருமை பீற்றிக்கொள்வார்கள். ஆனால், உலக அரங்கில் எப்படி இந்தியா பாரம்பரியமான பண்பாடான நாடு என்று பீற்றிக்கொண்டாலும் அதன் முகமூடி அடிக்கடி கிழிந்து தொங்குமோ அதைப்போலத்தான் மேற்கு மண்டலத்தின் முகமூடியும் அடிக்கடி கிழிந்து தொங்கும். சமீபத்தில் மீண்டும் அவ்வாறு இரு இடங்களில் கிழிந்திருக்கிறது. வழக்கம்போல் முற்போக்கு, சமூகநீதி, சனநாயகம், சமத்துவம், புரட்சி பகுத்தறிவு, இன்னபிற பேசுபவர்கள் எல்லாருமே வாய்மூடி மௌனிகளாக அமைதியாக கடந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ள சாமளாபுரத்துக்கு பக்கத்து கிராமம் பரமசிவம்பாளையம் இங்கு குடியிருக்கும் கருப்புசாமி துரைசாமி இருவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இருவரும் 20.09.2011 அன்று சாபிடுவதற்காக பகவதியம்மன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே குடிபோதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இருபத்தாறே வயதான கவுண்டன் சிவசண்முகத்துக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட தொடங்கியுள்ளனர். பொறுக்குமா ஆதிக்க சாதி வெறியனுக்கு? இருவரையும் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளான் சிவசண்முகம், சாப்பிட அனுமதித்த ஹோட்டல் முதலாளிக்கும் திட்டு. குடிபோதையில் உளறுகிறான் என்று அமைதி காத்தனர் கருப்புசாமியும் துரைசாமியும். குடிபோதையை மிஞ்சிய சாதிபோதையால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனது செருப்பை எடுத்து கருப்புசாமியின் இலையில் வைத்து இதையும் சாப்பிடு என்று மிரட்டியுள்ளான். அவமானத்தால் கூனிக்குறுகிப்போன இருவரும் எழுந்து வெளியே போக முயல கருப்புசாமியை செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து பேருந்து நிறுத்தம் போன இருவரையும் துரத்தி வந்து பேருந்து நிறுத்தத்தில் வைத்தும் செருப்பால் அடித்துள்ளான். பாதிக்கப்பட்டவர்கள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவசண்முகம் தற்சமயம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தீக்கதிர் நாளிதழைத்தவிர எந்த நாளிதழும் இந்த செய்தியை பிரசுரிக்காமல் தங்களது சாதிப்பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டன. மனிதத்தின் மீது நடந்த இந்தப்பெரிய தாக்குதலுக்குப் பிறகும் கூட எந்தவொரு அரசியல் கட்சியும் கண்டனம் முழங்க தயாராய் இல்லை. தலித்துகளுக்கும் ஆயிரம் வேலைகள்! அவர்கள் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் வாக்கு சேகரிக்க கிளம்பிவிட்டனர்.

இதுபோலவே, இன்னொரு சம்பவம், கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள ஆலாந்துறைக்கு அருகில் உள்ளது நாதேகவுண்டன்புதூர். இங்கு வசித்துக்கொண்டு கட்டிட மேசனாக வேலை செய்து வரும் 24 வயதான சந்தோஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டு திரும்ப வரும் வழியில் கடந்த 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு ஆர் கே பேக்கரி முன் தனது வண்டியில் சாய்ந்து நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பதினெட்டே வயதான மணிகண்டன் என்கிற கவுண்டனுக்கு பொறுக்குமா? அதே இடத்தில் வைத்து சந்தோஷ்குமாரை தாக்கியுள்ளான். அங்கிருந்தவர்கள் தடுத்து சந்தோஷ்குமாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சந்தோஷ்குமார் வீட்டுக்கு போய்விட்ட பின்னரும் சாதித்திமிர் அடங்காத மணிகண்டன் 15க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு போய் சந்தோஷ்குமாரின் வீட்டுக்கே போய் வீட்டு முன் இருந்த படலைப் பிய்த்தெறிந்து சந்தோஷ்குமார், அவரின் தாயார் செல்வி, பெரியப்பா நஞ்சப்பன் மூவரையும் கடுமையாக தாக்கி 108 ஆம்புலன்சில் கொண்டு போய் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்குமளவுக்கு காயப்படுத்தியுள்ளனர். தொலைபேசியில் பலமுறை புகார் கொடுத்தும் வராத காவல்துறை தலித் மக்களின் சாலை மறியலுக்குப் பிறகே வந்து சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மருத்துவமனை மட்டும் விதிவிலக்கா என்ன? அடிபட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தன் சாதி வக்கிரத்தை வெளிப்படுத்திக்கொண்டது.

இரண்டு சம்பவங்களிலுமே ஆழ்ந்து கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், இரண்டு வன்கொடுமைக் குற்றவாளிகளுமே 26 வயதும் 18 வயதுமே ஆனவர்கள். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? அதெல்லாம் பழைய காலத்து ஆளுங்க என்று சொல்பவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? அதிலும் பாதிக்கப்பட்டவர்களை விட வன்கொடுமைக் குற்றவாளிகள் வயதில் இளையவர்கள்.

ஆனாலும் தலித்துகளே வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 6ன்படி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி விடாதீர்கள். நீங்கள் வன்முறையாளர்கள் ஆகவும் பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தப்பட்டு தேசியத்தை பாதுகாக்க சிறைக்கதவுகளை திறந்து விடுவார்கள். ஜாக்கிரதை.

அரசியல் கட்சிகளின் அடிமைகள்

Friday, July 15, 2011

பகிரங்கமாக மன்னிப்பு கேட்போம்!

நவீன ஆடைகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை குறிப்பாக செல்போன், மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை உடைமையாக்கி வைத்திருப்பதே நாகரீகம் என கற்பிக்கப்பட்டிருக்கிற இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தின் கோரமான வெளிப்பாடுதான் கோவை மாநகர போக்குவரத்து சிக்னலில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞரின் மரணம். நான் அந்த இடத்தில் இல்லை என்று காரணம் சொல்லி தப்பித்து விட முடியாது. கண்ணுக்கு எட்டுகிற தூரத்தில் கூட அல்ல, கைக்கு எட்டுகிற தூரத்தில் ஒரு சக மனிதனை கல்லால் அடித்துக் கொல்லபபடுகிற போதும் கூட எந்தவித சமூகப்பிரக்ஞையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிற கோவை மாநகரவாசிகளில் நாமும் ஒருவரா என்கிற கேள்வி இதயத்தை துளைக்கிறது. பேச்சில் கூட மரியாதை காட்டுகிற கோவை மாநகர வாசிகளின் மனிதாபிமானம் கிழிந்து தொங்குகிறது. மது குடிப்பதையும் புகை பிடிப்பதையும் "ஆண் குணமாக" மாற்றி வைத்திருக்கிற சினிமா ஊடகத்தின் வெற்றிதான் இந்த பச்சைப் படுகொலை. சக மனிதனின் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்குமளவு மரத்துப்போன சமூகமாக மாறிவிட்டோமா என்கிற கனத்த இதயங்களோடு கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தை நோக்கி பகிரங்கமாக மன்னிப்பு கேட்போம்! சக மனிதர்களை நேசிக்கிற குணத்தை இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்!!

Tuesday, July 5, 2011

தீண்டாமையை கடைபிடிப்போரின் புதிய கண்டுபிடிப்பு.

உலகிலேய பாரம்பரியமான கலாசார பின்னணியும் கொண்டதாக பெருமை பீற்றிக்கொள்ளும் நாடு இந்தியா. இந்தியாவில் சமூகநீதிக்கு களம் அமைத்துக்கொடுத்ததாக பெருமை பீற்றிக்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் அமைதிப்பூங்காவாக சாதிக்கலவரம் ஏதும் நடைபெறாததாக பீற்றிக்கொள்ளும் மண்டலம் மேற்கு மண்டலம் (கொங்கு மண்டலம்). அந்த கொங்கு மண்டலம்தான் இந்த 21 ம் நூற்றாண்டில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாதிவெறிக் காட்டுமிராண்டிகளுக்கு தீண்டாமையின் புதிய வடிவத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இரட்டை டம்ளர், இரட்டை சுடுகாடு, இரட்டை சலூன், இரட்டை பென்ச், என விதவிதமான இரட்டைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால். இந்திய தீண்டாமை வரலாற்றில் முதல்முறையாக ...? இரட்டை பஸ் முறையை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள்.

கோவை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மற்றவர்களின் கண்களுக்கு பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் தலித்துகளின் ரத்தத்தையும் உழைப்பையும் வெட்கமில்லாமல் வழித்து நக்கி குடித்து வளமாக்கி வைத்துள்ளதால் தலித்துகளின் கண்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடிய வயல்வெளிகள் நிறைந்த கிராமங்களில் ஒன்றுதான் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெம்பனூர் கிராமம். இக்கிர்ரமத்தில் சுமார் 500 ஒக்கலிகர் குடும்பங்களும் சுமார் 10 போயர் குடும்பங்களும் சுமார் 350 அருந்ததியர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலான ஒக்கலிகர் குடும்பங்கள் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 3 குடும்பங்கள் தவிர அருந்ததியர்கள் யாருக்கும் நிலம் இல்லை. பெரும்பாலும் நகரங்களுக்கு பெயிண்டிங் பிளம்பிங் கட்டிட வேலை போன்ற பணிகளுக்கு செல்கின்றனர்.

கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்ட அரசுப்பேருந்து 64 டி. அந்த பேருந்து கெம்பனூர் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் கெம்பனூர் எல்லைக்கு 200 மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குள்ளேயே நின்று விடும். கிராமத்தின் எல்லையில் சேரியில் இருப்பவர்கள் 200 மீட்டர் நடந்து சென்று பேருந்தில் ஏறி நகரத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த கிராமத்தை உள்ளடக்கிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று எட்டு கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியை சேர்ந்த தமிழக அமைச்சர்களில் ஒருவராக பொறுப்பேற்ற எஸ் பி வேலுமணி நன்றி தெரிவிப்பதற்காக கெம்பனூர் வந்தார். கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்டிருக்கும் அரசுப்பேருந்து 64 டி எல்லை வரைக்கும் வராமல், ஊருக்குள்ளேயே நின்று விடுவதைக் கூறி பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென சேரிமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அமைச்சரும் பின்விளைவுகள் ...? ஏதும் அறியாமல் உடனே அதிகாரிகளை அழைத்து பேருந்துகளை முறையாக இயக்குமாறு உத்தரவிட்டு சென்று விட்டார். பேருந்து சரியாக மூன்று முறை கிராம எல்லையான சேரி வரைக்கும் சென்று திரும்பியது.

பேருந்து சேரி வரை சென்று திரும்பியதால் தலித்துகளுக்கு இந்த முறை உட்கார்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. ஊர் பேருந்து நிறுத்தத்தில் ஏறியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தலித்துகள் உட்கார்ந்து கொண்டும் சாதிவெறியர்கள் நின்று கொண்டும் பயணிக்க பொறுக்குமா சாதிவெறியர்களுக்கு? நான்காவது முறையாக பேருந்து வரும்போது, கடல் தாண்டியும் வாழ்கிற தமிழர்களின் உரிமைக்குரலான ...? ம.தி.மு.க வின் மாவட்ட துனைச்செயலரும் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலருமான கதிரவன் தலைமையில் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சாலை மறியல் செய்ததோடு இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் போகக்கூடாது என மிரட்டினர். அதிகாரிகள் வழக்கம் போல தலையிட்டு இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் செல்லாது என உத்தரவாதம் தந்து அவ்வாறே நடைமுறைப்படுத்தினர். அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளும் சாதி பிரச்னையைஎல்லாம் மூடிமறைத்து ஏதோ இரண்டு வெவ்வேறான ஊர்களுக்கு இடையில் நடந்த பிரச்னை போல செய்தி வெளியிட்டு அனைத்து ஊடகங்களும் தங்களது சாதிப்பாசத்தை உறுதிப்படுத்திக்கொண்டன.

அமைச்சர் கொடுத்த உத்தரவு ஒரே நாளில் காற்றில் பறக்க விடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த தலித்துகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அமைச்சர் கொடுத்த உத்தரவை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை விடுத்தனர். முந்தைய நாள் ஊர் மக்களின் மறியலை செய்தியாக்கிய அனைத்து நாளிதழ்களும் (தீக்கதிர் நீங்கலாக ) சேரி மக்களின் போராட்டத்தை செய்தியாக வெளிவிடாமல் பார்த்துக்கொண்டது.

சேரி மக்களின் போராட்டத்துக்கு பிறகு வழக்கம்போல நடந்து முடிந்த அநீதிக்கு தண்டனை என்பதையெல்லாம் மறந்து இனிமேல் பிரச்னை வராமல் இருக்க சமாதான கூட்டத்தை நடத்தி உலகளாவிய கண்டுபிடிப்பாக ஒரு சமரச முயற்சிக்கு கொண்டு வந்தனர். அதுதான் "இரட்டை பஸ்".
ஒரே வழித்தட எண் (64 d ) கொண்ட அரசுப்பேருந்து 6 முறை சேரிக்கும் மீதமுள்ள முறைகள் ஊருக்குள்ளும் வரும் என அதிமேதாவித்தனமான முடிவுக்கு காவல்துறை இருதரப்பினரையும் ஒப்புக்கொள்ள வைத்து தங்களை வழிநடத்தும் இந்திய அரசியல் சாசனத்துக்கு மன்னிக்கவும் மனுதருமத்துக்கு உண்மையாக நடந்து கொண்டனர்.

அவ்வாறாக ஒப்புக்கொண்ட பின்னரும் கூட காவல்நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட முடிவை காற்றில் பறக்க விட்டு ஒரே ஒரு முறை மட்டும் அரசு பேருந்து சேரிக்குள் வந்து செல்கிறது. சேரி மக்கள் பயன்படுத்தும் அந்த பேருந்தை பெரும்பாலும் ஊர் மக்கள் பயன்படுத்துவது இல்லை, ஆக தலித்துகளுக்கு ஒரு பேருந்து ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஒரு பேருந்து என கெம்ப னூர் சரியான இந்து கிராமமாக இருக்கிறது.

என்னது ..? இரட்டை வாக்குரிமையா..? அது நாங்கள் மேடையில் பேசும்போது பயன்படுத்துவதோடு சரி...!

--
Entrum saathi ozhippu paniyil,
Neelaventhan
9443937063
http://aathithamilan.blogspot.com/

Saturday, April 23, 2011

அம்பேத்கர் புரட்சியாளரே..!
நோய்நாடி நோய் முதல்நாடி என்பது தானே மருத்துவ இலக்கணம். சாதியின் தோற்றுவாயைத் தெரிந்து கொள்ளாமல் சாதியை ஒழிக்கப் புறப்பட முடியுமா? ஆனால் சாதியை கற்பித்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் அல்லவா இருக்கிறது? சூத்திரன் படித்தாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொன்ன மனுதருமம், பஞ்ச மன் அம்பேத்கரை சமஸ்கிருதம் படிக்க விடுமா? ஆனாலும் பாடத்திட்டத்தில் இல்லாத போதும், மனுதருமம் தடுத்த போதும் சமஸ்கிருதத்தையும், புத்த இலக்கியங்கள் இருந்த பாலி மொழியையும் கற்றுக் கொண்டார்.


சாதியைக் கற்பித்த மனுதருமத்தையும், பகவத் கீதையையும் படித்ததினால்தான் மனு தருமத்தைக் கொளுத்தினார். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் எனச் சொன்ன கீதையை முட்டாளின் உளறல் என்றார்.


வாழிடம் வேறானால் நாடு பிரிக்கிறது. கடவுள் வேறானால் மதம் பிரிக்கிறது. பொருளாதார நிலை வேறானால் வர்க்கம் பிரிக்கிறது. மொழி, பண்பாடு வேறானால் இனம் பிரிக்கிறது. உடலமைப்பு வேறானால் பால் பிரிக்கிறது. ஆனால், ஒரே நாட்டில் வாழ்ந்து கொண்டு, ஒரே கடவுளை வணங்கிக் கொண்டு, ஒரே பொருளியல் நிலையில், ஒத்த மொழி மற்றும் பண்பாட்டுடன், ஒத்த உடல மைப்புடன் வாழும் மனிதர்களை எந்த அடிப் படைக் காரணியும் இன்றி பிரித்து வைக்கும் சாதி எனும் மிக மோசமான நிறுவனம் எந்த அறிவியல் அடிப்படையும் இன்றி மூவாயிரம் ஆண்டுகளாக நீடிப்பது குறித்து ஆழமாக ஆய்ந்து, சாதி என்பது பண்பாட்டு விழுமியமே அன்றி வேறில்லை என்றார்.


சாதியை வரையறை செய்த சமூகவியல் வல்லுனர்கள் நிறைய உண்டு. ஆனாலும், அடைபட்ட வர்க்கமே சாதிமுறை. சாதி ஒழிப்பின்றி இந்தியப்புரட்சி சாத்தியமில்லை என்ற அம்பேத்கரின் வரையறை முழுமையானது என்றால் மிகையாகாது.


சாதியின் தோற்றம் மற்றும் அதன் இருப்பு ஆகியவற்றோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், சாதி ஒழிப்பு குறித்தும் விரிவான ஆய்வை மேற்கொண்டார். 1932ம் ஆண்டு வாக்கில் பஞ்சாப்பில் ஜாத்-பட்-தோடக் மண்டல் எனும் அமைப்பு ஏற்பாடு செய்த சாதி ஒழிப்பு மாநாட்டில் பேசுவதற்காக தயார் செய்து வைத்திருந்து பேச முடியாமல் போன உரையை சாதி ஒழிக்க என்ன வழி எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.


பின்னாளில் யாராவது என்னுடைய வழித்தோன்றல்கள் சொல்லிக் கொள்ள விரும்பினால், இந்த நூலைப் படித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அம்பேத்கர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மேற்கண்ட நூலை முழுவதும் படித்து சாரமாக்கிக் கூற விரும்பினால், இட ஒதுக்கீடு, அகமண முறை ஒழிப்பு, இந்து மத வெளியேற்றம் இம்மூன்றுமே சாதியை ஒழிக்கும் வழி என்பதேயாகும்.


இட ஒதுக்கீடு என்றால், 100 அரசு ஊழியர்களில் 18 பட்டியல் சாதியினரை அரசு ஊழியர் ஆக்குவது என்றும் அதன் வாயிலாக அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது என்றே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தொழிலுக்கு ஒரு சாதி என நியதி கற்பித்த மனுதருமத்துக்கு மாற்றாகத்தான் இட ஒதுக்கீட்டு கோட்பாட்டை அம்பேத்கர் முன்வைத்தார். இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார வர்க்க அடிமை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ளவே என்ற முதல் நோக்கில் இட ஒதுக்கீட்டை சாதி ஒழிப்புக்கு முதல் நிபந்தனையாக்கினார்.


சாதி அமைப்பினால் பாதிக்கப்பட்டோ ரையும் கூட சாதி அமைப்பைக் கட்டிக்காக்க வைத்ததுதான் சாதிய அமைப்பு முறையின் விந்தையான கட்டுமானம். தனக்கு மேலே எத்தனை சாதி இருந்தாலும் தனக்குக் கீழே ஏதாவது ஒரு சாதி இருந்தாலும் போதும் என்ற கழிசடையான திருப்தி மனநிலைதான் இன்றளவும் சாதியைத் தக்க வைத்து நீடித்து நிலைக்கச் செய்திருக்கிறது. தன் மீது திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, வன்கொடுமைகளுக்கு எதிராக, இழிவுகளுக்கு எதிராக மூர்க்கமாக போராடும் பட்டியலிடப்பட்ட சாதியினர் கூட தன் சக பட்டியல் சாதியினரோடு திருமண உறவு கொள்வதில்லை. திருமண உறவுகளில் சாதித் தூய்மை கடைப்பிடிக்கிற தூய்மை வாதம் நீடிக்கிறவரை சாதி ஒழிப்பு என்பது கானல் நீரே என்று உணர்ந்த அம்பேத்கர் அவர்கள், அகமண முறை ஒழிப்பை சாதி ஒழிப்புக்கு இரண்டாம் நிபந்தனையாக்கினார். பொதுவாக எல்லா மதங்களும் மக்களை இணைக்கும். நாடு, மொழி எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கிற வேலையைத் தான் எல்லா மதங்களும் காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் தன் சொந்த மத மக்களை தங்களுக்குள் தீண்டிக் கொள்ளாமல், ஒருவருக்கொருவர் புழங்கிக் கொள்ளாமல் சாதி சொல்லி பிரித்து வைத் திருக்கிற ஒரே மதம் இந்து மதம்தான். எனக்கு எந்த சாதியும் கிடையாது, நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று யாராலும் சொல்லிக் கொள்ள முடியாது. இந்து என்று சொல்லிக் கொள்கிற யாரும் ஏதாவது ஒரு சாதியில் இருந்தாக வேண்டும் என்கிற கட்டுமானத் தைக் கொண்ட இந்து மதத்தில் நீடித்துக் கொண்டு சாதியை ஒழிக்க முடியாது என்று ஆய்ந்தறிந்த அம்பேத்கர் அவர்கள், இந்து மத வெளியேற்றத்தை சாதி ஒழிப்புக்கு மூன்றாவது நிபந்தனையாக்கினார்.


எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு பாடப்புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் மட்டும் எடுத்துப்போன காலத்தில், உட்காருவதற்காக ஒரு கோணிப்பையை உடன் எடுத்துச் சென்று, தாகம் தணிப்பதற்குக் கூட மேல்சாதி மாணவனின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்து, ஒரு எருமை மாட்டிற்கு முடிவெட்டி விட்டாலும் விடுவேன், உனக்கு முடிவெட்டி விட மாட்டேன் என முடிதிருத்தும் நிலையத்தி லிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, தன் மூத்த சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு, வாடகைக் குதிரை வண்டியில் போகும்போது சாதியைத் தெரிந்து கொண்டதால் வண்டி யோடு தலைகுப்புறக் கவிழ்த்துவிடப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு என இளம்வயதில் அனைத்து விதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான போதும், அத்துனை இழிவு களையும் உரமாக்கிக் கொண்டு, வெளிநாடு களுக்கு சென்று சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வந்து நாட்டின் அரசியல் சாசனத்தையே எழுதும் அளவுக்கு உயர்ந்தது, அம் பேத்கரின் அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, முருங்க மரம் விட்டத்துக்கு ஆகாது. சக்கிலியப்புள்ள பட்டத்துக்கு ஆகாது எனும் மனுதருமப் பழமொழிகளுக்கு கொடுத்த சவுக்கடியுமாகும்.


அரசியல் சாசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சிறுபான்மை யினருக்கு என அனைத்து தரப்பட்ட மக்க ளுக்கும் பயன்படுத்தியது நீண்ட நெடிய செய்தி. சவுதார் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நீர் எடுக்க தடை விதிக்கப்பட்ட போது, நேரடியாகவே போராட்டக் களத்தில் இறங்கி ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டியது உள்ளிட்ட போராட்ட வரலாறும் தனித்த நீண்ட செய்திகளாகும்.


இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்து அரசியல் நிர்ணய சபையில் வைத்து உரையாற்றுகிறபோது, நாம் வருகிற ஜனவரி 26 (1950) முதல் ஒரு மனிதன் ஒரு வாக்கு எனும் அரசியல் சமத்துவம் நிலவப் போகிற புதிய சமூக அமைப்பில் நுழையப் போகிறோம். அந்த அரசியல் சமத்துவத்தைப் பயன்படுத்தி சமூக சமத்துவத்தை ஏற்படுத்த தவறினால் இந்த அமைப்பை தூக்கி எறியவும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்று அரசியல் நிர்ணய சபையில் நின்று முழங்கியவர் அம்பேத்கர்.


சமூக அமைப்பை வியாக்கியானம் செய்து கொண்டிருந்த தன் முந்தைய தலைமுறைக்கு மாற்றாக, சமூக அமைப்பை மாற்ற துணிச்சலுடன் போராடிய அம்பேத்கருக்கு புரட்சியாளர் என்ற அடைமொழியும் பொருத்தம்தான்.


புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட தீண்டாமை ஒழிந்த, சாதி ஒழிந்த சமூகம் இன்றளவும் அமையவில்லை. அவர் கனவு கண்ட சமூகம் அமைக்க, அவர் விட்டுச் சென்ற பணி முடிக்க வெறும் தலித்துகள் அணிதிரள்வதால் மட்டும் முடியாது.


தலித்துகளின் அவல நிலையைக் கண்டு, அய்யோ பாவம் என்று இரக்கப்படுபவர்களுக்கு மத்தியில், தலித்துகள் உரிமைகளைப் பற்றி முழக்கமிடும் போது, அந்த முழக்கங்களின் அடிப்படையில் உள்ள ஜனநாயக சமத்துவ வேட்கையைப் புரிந்து கொண்டு, தியாகத் தழும்புகளால் நிறைந்த தாய்மை உணர்வுடன் கூடிய முற்போக்கு எண்ணமும் புரட்சிகர நோக்கங்களும் சமூக நீதிக்கோட்பாட்டை, இட ஒதுக்கீட்டு பலனை தாண்டி புரிந்து கொள்கிற தாழ்த்தப்பட்டோர் அல்லாத இதர ஜனநாயக சக்திகளும் தலித்துகளும் தோழமையோடு அணி திரளும் போதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட, தீண்டாமை ஒழிந்த, சாதி ஒழிந்த சமூகம் அமைக்க முடியும்.


அந்த இலட்சியப்பாதையில், சுயநலம் இல்லாமல், எந்தவித இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் தயாராய் நடைபோடுவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்