நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Tuesday, April 17, 2012


சமூக நீதியும் மனுதருமமும்

சமூக நீதி என்கிற மகத்தான சொல் சிலரின் பெயருக்கு முன்னால் ஒட்டாக இருப்பதினாலேயே மலினப்பட்டுப் போயிருக்கிறது. சமூக நீதி என்பது சமநீதி என்கிற சொல்லைக்காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு அர்த்தம் பொதிந்த சொல்லாகும். சமமில்லாத இருவரை சமமாக நடத்துவது சம்மாகாது என்பதே சமூக நீதியின் அடிப்படை இலக்கணமாகும். ஒரு வறண்டு போன குளம் ஒரு இடத்தில் மேடாகவும், ஒரு இடத்தில் பள்ளமாகவும், ஒரு இடத்தில் நடுத்தரமாகவும் இருக்கும். அந்த ஏற்றத்தாழ்வான இடத்தை நீர் இட்டு சமமாக நிரப்ப வேண்டுமானால், ஆழமான இடத்தில் அதிகமான நீரையும் மேடான இடத்தில் குறைவான நீரையும் நடுத்தரமான இடத்தில் நடுத்தரமான அளவு நீரையும் விட்டு நிரப்ப வேண்டும்.

ஒரு கூட்டத்தில் இருக்கிற 100 பேருக்கு ஆளுக்கு 5 ரூபாய் கொடுப்பது சமத்துவமாக நடத்துவதற்கு ஒப்பானதாகும். ஆனால், ஒவ்வொருவரிடமும் ஏற்கனவே 5 ரூபாயோ 10 ரூபாயோ 50 ரூபாயோ 100 ரூபாயோ இருக்குமானால், அவர்களிடையே நிலவும் அசமத்துவம் நீடிக்கவே செய்யும். மாறாக, ஒருவருக்கு 95 ரூபாயும், ஒருவருக்கு 90 ரூபாயும், ஒருவருக்கு 50 ரூபாயும், ஒருவருக்கு ஒன்றுமே கொடுக்காமல் இருப்பது மேம்போக்காக சமத்துவமில்லாமல் நடத்துவதாக தோன்றினாலும் அதுதான் அந்த கூட்டத்தினரிடையே உள்ள அசமத்துவத்தைப் போக்கும். முதல் நடவடிக்கை சமநீதி என்றால், இரண்டாவது நடவடிக்கை சமூக நீதியாகும்.

ஏற்றத்தாழ்வு ஒன்றையே தனது அடிப்படையாகவும், இலக்கணமாகவும் கொண்டிருக்கிற, முடை நாற்றமெடுத்துப்போயிருக்கிற நீண்ட நெடிய காலமாக கெட்டி தட்டிப்போயிருக்கிற அசமத்துவ இந்திய சாதிய சமுதாயத்தை சீர்படுத்தும் நோக்கில் புரட்சியாளர் அம்பேத்கரும் கலகக்காரர் பெரியாரும் முகிழ்த்தெடுத்த கோட்பாடுதான் சமூக நீதிக்கோட்பாடு. சமூகநீதிக்கோட்பாட்டின் ஒரு துளி வெளிப்பாடுதான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டோடு சமூக நீதி முடிந்து போகாது என்றாலும் சமூக நீதிக்கோட்பாட்டின் முதல் படியான இட ஒதுக்கீடே பல நிலைகளிலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

அவ்வாறாக, சமூகநீதிக்கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குபவர்கள், சமூக நீதிக்கோட்பாட்டினால் பலன் அடைந்தவர்களாக இருப்பதுதான் வேதனையாகும்.  

அதுபோக, சமூகநீதிக் கோட்பாடு என்பது நம்முடைய தலைவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. அது நம் கொள்கை எதிரிகளின் கண்டுபிடிப்பான மனுதருமக்கோட்பாட்டுக்கு பதிலடியாக கண்டுபிடித்ததே சமூக நீதிக் கோட்பாடாகும்.

அறிவியல் அடிப்படை ஏதும் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் மனித குலத்தை நான்கு வருணங்களாக பிரித்ததோடு, ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு தொழிலை நிர்மாணித்து ஒவ்வொரு வருணத்தவரும் அவரவர் வருணத்திலேயே மண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மனுதருமம். அதற்கு நேர் மாறாக, எல்லா வருணத்தவரும் எல்லா தொழிலையும் செய்யலாம் என்பதற்கான அடித்தளத்தை அமைத்து தருவதே இட ஒதுக்கீட்டைத் தாங்கி நிற்கும் சமூக நீதிக்கோட்பாடாகும்.

இட ஒதுக்கீடு என்பது, காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட, இன்றைக்கு ஆதிக்க சாதிவெறியர்கள் என்று மீசை முறுக்கிக் கொள்கிற சூத்திரர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கு நேர் எதிரான வாழ்வியலை ஆரம்ப காலம் தொட்டே மேற்கொண்டு வந்ததால், சேரிகளில் சிறை வைக்கப்பட்டு தீண்டாமையையும் வன்கொடுமையையும் பரிசாகப் பெற்று வாழ்ந்து வருகிற பஞ்சமர்களுக்கும் ஒரு சில அரசு பதவிகளை உத்தரவாதப்படுத்துவதற்காகவோ, அதன் வாயிலாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வை வளமாக்குவதற்கோ, உருவாக்கப்பட்டது அல்ல.   

மாறாக, பார்ப்பனர் என்று அறியப்படுகிற வருணத்தவர் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் மரணச்செய்தி வாசிக்க வைக்கப்படுவதும், பஞ்சமர் என்று அறியப்படுகிற வருணத்தவர் இ.ஆ.ப அதிகாரியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தலைமையேற்க வைக்கப்படுவதும், சூத்திரர் என்று அறியப்படுகிற வருணத்தவர் நீதி சொல்கிற மன்றத்தில் தலைவராக அமர வைக்கப்படுவதுமே சமூக நீதிக்கோட்பாடாகும்.

ஆனால், இன்று இந்த வரலாற்றையெல்லாம் கற்றறியாமல், அதிகாரத்துக்கு வந்துவிட்ட சூத்திரர்கள் தங்களைப் படிக்க விடாமல் செய்த பார்ப்பன வருணத்தவர் மீது கோபம் கொள்ளாமல், சமூக நீதிக்கோட்பாட்டைத் தாங்கிப் பிடிக்காமல் மூளையால் பார்ப்பனர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக இருக்கின்றனர்.

புரட்சியாளர் அம்பேத்கரும் கலகக்காரர் பெரியாரும் மறைந்து பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும் அந்த மகத்தான தலைவர்களுக்கான தேவை முடிந்து விடவில்லை. அவர்கள் தொடங்கி வைத்த சமூக நீதிக்கான போர் இன்று ஆதித்தமிழர்களான நம் கைகளில் இருக்கிறது. இந்தக் கருத்தியல் போரில் அரிவாளால் வெட்டுவதில் பயனில்லை. அறிவால் வெட்டுவோம் வாரீர்…!

-நீலவேந்தன்

ஏப்ரல் மாத ஆதித்தமிழன் இதழில் எழுதிய தலையங்கம்.